இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு
இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.
இந்த திடீர் தாக்குதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பதற்றம் நிலவும் லடாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
#WATCH Prime Minister Narendra Modi addresses soldiers in Nimoo, Ladakh https://t.co/LCa8oWxL39
— ANI (@ANI) July 3, 2020
இந்நிலையில் லடாக்கில் வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது . இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள் .அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம்” என்றார்.