சசிகலாவை வரவேற்க பேனர் வைக்கனும்.. அனுமதி கொடுங்க- அமமுக
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைத்தவர் சசிகலா. முதல்வராக பதவியேற்க இருந்தநேரத்தில் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு சசிகலாவின் கனவை தகர்த்து எறிந்தது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் என உடைந்த அதிமுக மீண்டும் இணைந்து கட்சியில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு இடமில்லை என்று அறிவித்தது. இந்த சூழலில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி 4 ஆண்டுகால சிறைவாசத்திற்கு பிறகு சசிகலா விடுதலையாகிறார். சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதிமுக அமைச்சர்களும், முதல்வர் மற்றும் துணை முதல்வரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலாவை வரவேற்க அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக கூட்டத்தினர் பல்வேறு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவருகின்றனர். பெங்களுரூவில் இருந்து சென்னை வரை பிரமாண்டமான வரவேற்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனொரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் அமமுக நிர்வாகிகள் சார்பில் அங்குள்ள காவல்நிலையத்தில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மனுவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவை வரவேற்க பேனர்கள் வைக்க அனுமதி வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.