பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரி வசூல் தொற்றுநோயின் அலைகள் தொடர்ந்து வருகின்றன.. ராகுல் காந்தி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு வரி வசூல் தொற்றுநோயின் அலைகள் தொடர்ந்து வருகின்றன என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 61 நாட்களில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சமாக குறைந்துள்ளது. கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளபோதிலும் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்துள்ளன. அதேசமயம் சில தளர்வுகளையும் வழங்கியுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தது. ஊரடங்கு காரணமாக சாமானிய மக்கள் வெளியே வராததால் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. பல மாநிலங்கள் நேற்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால், நேற்று முதல் பொதுமக்கள் வாகனங்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர். வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போது கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை உணருவர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு மோடி தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், லாக்டவுன் தளர்வு பல மாநிலங்களில் தொடங்குகிறது. பெட்ரோல் பம்பில் பில் (பெட்ரோல், டீசலுக்கு பணம்) செலுத்தும் போது, மோடி அரசால் செய்யப்பட்ட பணவீக்கம் அதிகரிப்பை நீங்கள் காண்பீர்கள். வரி வசூல் தொற்றுநோயின் அலைகள் தொடர்ந்து வருகின்றன என்று பதிவு செய்துள்ளார்.