அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு!

 

அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஈரோடு

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், மணல் குவாரி தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55,000 லாரிகள் உள்ளதாகவும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இந்த தொழில் விளங்கி வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2017 ஜூன் மாதம் முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு, நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமலான நிலையில், தமிழகத்திற்கு தினசரி குறைந்தபட்சம் 60,000 யூனிட் மணல் தேவைப்படும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 6 குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், அதன் மூலம் தினசரி 2,500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு!

மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஆறுகளில் மணல் திருட்டு மூலமாகவும், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்து விலைக்கு வாங்கி ரூ.20,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மணல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும், லோடு இல்லாததால், மணல் லாரிகள் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, மணல் தட்டுப்பாட்டை போக்க, நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும் என்றும் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.