சிறுமியை ‘பாலியல் வன்கொடுமை’ செய்ய முயற்சி : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
பல்லடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இன்று காலை இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குள் சென்று இருக்கிறார். அங்கு புதரில் மறைந்து கொண்டிருந்த 40 வயதான நபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து வாயை பொத்தி தூக்கிச் சென்று இருக்கிறார். அவர் வாயில் இருந்து கையை எடுத்ததும், சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தத்தை கேட்டு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர். பொதுமக்களை கண்டதும் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்ற நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழவே, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த நபர் யார்? என்பது குறித்த விவரங்கள் மயக்கம் தெளிந்த பிறகு தான் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் கல்குவாரி ஒன்றில் பணியாற்றி வரும் நபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நபரை பொதுமக்கள், துணிச்சலுடன் அடித்து உதைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.