கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு.. விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை.. கவர்னரை தாக்கிய சரத் பவார்
கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு, ஆனால் விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சரத் பவார் விமர்சனம் செய்தார்.
மும்பையில் விவசாயிகள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடந்தது. அந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதில் பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தில் சரத் பவார் பேசுகையில் கூறியதாவது:
கடந்த 60 நாட்களாக, குளிர், வெயில், மழை பற்றி கவலைப்படாமல், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாய் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் (மத்திய அரசு) இவர்களை பஞ்சாப் விவசாயிகள் என்று கூறுகிறார்கள். பஞ்சாப் என்ன பாகிஸ்தானா? அவை நம்முடையவை. சீரற்ற நிலைமைகளை எதிர்க்கொண்டுள்ள விவசாயிகளின் நிலைமைகளை மத்திய அரசு விசாரிக்கவில்லை. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
நீங்கள் அனைவரும் கவர்னரிடம் செல்கிறீர்கள். அனால் மகாராஷ்டிரா இத்தகைய கவர்னரை இதற்கு முன் பார்த்ததில்லை. கங்கனா ரனாவத்தை சந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறது. அனால் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை. அவர் உங்களிடம் பேச இங்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அவர் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.