தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!

 

தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி

சோதனையில் பிடிபட்ட வாகனங்களை விடுவிக்கக்கோரி, தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியர் தாஜ் நிஷா, நேற்று நாவல்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மண் ஏற்றி வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் உரிய அனுமதியின்றி மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, டெம்போ மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அதனை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!

இதனிடையே, தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நாவல்காடு மற்றும் ஈசாந்தி மங்கலம் முதல் ஞானதாஸ்புரம் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு கனரக வாகனங்கள் செல்ல முடியாததால், அந்த டெம்போவும், பொக்லைன் இயந்திரமும் பயன்படுத்த படுவதாகவும், எனவே, அவற்றை விடுவிக்க வேண்டும் என வட்டாட்சியரிடம், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி கூறியுள்ளார். ஆனால், வாகனத்துக்கு அனுமதி சீட்டு இல்லாததால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிடிபட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி ஞாலம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமையில் அருமநல்லூர், ஈசாந்தி மங்கலம், தடிக்காரன் கோணம் உள்ளிட்ட 13 ஊராட்சி மன்ற தலைவர்கள் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி விசாரணை மேற்கொண்டு, எழுத்துப்பூர்வமாக வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, வட்டாட்சியர் தாஜ் நிஷா உத்தரவின் பேரில், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.