முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

 

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

திருமுருகாற்றுபடை தந்த நக்கீரர் போல் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் போல் முருக வழிபாட்டில் மனம் செலுத்தி அரிய பல கருத்துக்கள் அடங்கிய 6,666 பாடல்களை இயற்றியவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்.

எழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் தொழுதே உருகி
அழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் அடியேன் உடலம்
விழும்போதும் வேலும் மயிலும்
என்பேன் செந்தில் வேலவனே.

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

19 – ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டைத் தீவிரமாக்கிய மகான்களில் ஒருவராக திகழ்ந்தார்.

சாத்தப்பப் பிள்ளை, செங்கமலம் தம்பதியருக்கு ஞான மகவாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பனில் பிறந்த சுவாமிகளின் இயற்பெயர் ‘அப்பாவு’ தமிழையும் வடமொழியையும் கற்று தேர்ந்து 12 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை பெற்ற அவர் அருணகிரிநாதப் பெருமானை குருவாக கொண்டு ‘கங்கையைச் சடையில் பதித்து’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார்.

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானார் பாம்பன் சுவாமிகள். அந்நாளில்  ‘சண்முகக் கவசம்’, ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ போன்ற பாடல்களை இயற்றினார். துறவறம் இருக்க பழநிக்கு முருகப்பெருமான் வரச் சொன்னதாக தனது நண்பரிடம் பொய்யுரைத்த ஸ்வாமிகளின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், பொய்யுரைக்குத் தண்டனையாக ‘தாம் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவே கூடாது’ என்று தடை விதித்ததால் சுவாமிகள் தமது இறுதிக்காலம் வரை பழநி செல்லவே இல்லை.

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

ஆனாலும் 1894- ல் ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற
கிராமத்தில் 35 நாள்கள் கடும் தவம் மேற்கொண்டு சித்திரா பௌர்ணமி தினத்தில் முருகப்பெருமானின் அருட்காட்சியை பெற்றார் பாம்பன் சுவாமிகள். அன்றிலிருந்து பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கிய பாம்பன் சுவாமிகள் அதன்பின் சொந்தங்களையும் சுகங்களையும் விலக்கி துறவறம் ஏற்று அருணகிரிநாதரைப்போல தல யாத்திரை மேற்கொண்டு முருகன் மீது 6,666 பாடல்களை அருளிச்செய்து போற்றினார்.

1918-ம் ஆண்டு ஸ்வாமிகள் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது ‘குமாரஸ்தவம்’ எனும் ஆறெழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்தப் பாடலால் பூரண குணம் பெற்றார். “ஓம் ஷண்முக பதயே நமோ நம:’ எனத் தொடங்கும் இந்த மந்திரப் பாடல்களைப் பாடுவோர், சண்முகப் பெருமான் இரு தேவியர்களோடு மயில் மீது அமர்ந்த காட்சியை தரிசிப்பார்கள்” என சுவாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் 1923 டிசம்பர் 27- ல் சென்னை தம்புசெட்டி தெருவில் நடந்து சென்ற சுவாமிகளின் மீது குதிரை வண்டிச் சக்கரம் இடித்து கால் எலும்பு முறிந்து போனது. சென்னை சென்ட்ரல் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் குணப்படுத்துவது கஷ்டம்’ என்று மருத்துவர்கள் கைவிட்டார்கள். ஆயினும் முருகப்பெருமான் கைவிடவில்லை. தினமும் பாடிய `சண்முகக் கவசம்’ அவரைக் காத்தது. 1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘15 நாளில் குணப்படுத்துவேன்’ என்று வாய் மலர்ந்தார். அவ்வாறே சுவாமிகளின் கால் எலும்புகளைச் சேர்த்து குணப்படுத்தினார். அந்த அற்புதத்தினன் சாட்சியாக இன்றும் சென்னை பொது மருத்துவமனை மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.
முருகன் காட்சியளித்த அந்த நாள் இன்றும் ‘மயூர வாகன சேவன விழா’ என மார்கழி மாத வளர்பிறை பிரதமை நாளில் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

பூரண குணமடைந்த பாம்பன் சுவாமிகள் 1926-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் நாள் ‘மகா தேஜோ மண்டல சபை அமைப்பு’ அமைப்பை ஏற்படுத்தினார். கந்தபெருமானை அடையும் காலம் வந்ததை சுவாமிகள் உணர்ந்தார். உணவை மறுத்தார். சதா சர்வ நேரமும் முருகப்பெருமானைத் துதித்தபடியே இருந்தார். 1929-ம் ஆண்டு மே 30-ம் தேதி காலை 7:15 மணியளவில் பாம்பன் சுவாமிகள் மகா சமாதியடைந்தார். 1929-ம் ஆண்டு மே 31 -ல் வங்க கடலோரம் சென்னை, திருவான்மியூரில் சுவாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு, மகா சமாதி அமைக்கப்பட்டது.

முருகப்பெருமானை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் பாம்பன் சுவாமிகள்!

இன்றும் பல ஆயிரம் மக்கள் கூடி வழிபடும் இடமாக சுவாமிகளின் சமாதி ஆலயம் விளங்கிவருகிறது. இங்கு பௌர்ணமி வழிபாடு மிக மிக சிறப்பு மிக்கது. இங்கு வந்து முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களை பாம்பன் சுவாமிகள் கைவிடுவதே இல்லை. திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் சுவாமிகளின் சமாதி ஆலயம் உள்ளது. அங்கு சென்றால் பாம்பன் சுவாமிகளின் அருளுடன் ஆறுமுகனின் அருளும் சேர்த்து பெறலாம்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.