ஈரோட்டில் பெயிண்டர் கழுத்தை நெரித்துக் கொலை… மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய கள்ளக்காதலி கைது!

 

ஈரோட்டில் பெயிண்டர் கழுத்தை நெரித்துக் கொலை… மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய கள்ளக்காதலி கைது!

ஈரோடு

ஈரோட்டில் குடித்துவிட்டு தகராறு செய்த பெயிண்டரை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் அம்மன்குளம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சு(25). இவரது கணவர் மகேஸ்வரன். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகேஸ்வரன் வீட்டுக்கு ஈரோட்டை சேர்ந்த பெயிண்டர் மதன் (30) என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, மதனுக்கும், மஞ்சுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சு, கணவரை விட்டு பிரிந்து, ஈரோடு ரங்கபாளையம் பகுதி இரணியன் வீதி ஒன்றில் வந்து மதன் உடன் தங்கி குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், மதன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மஞ்சுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் மதன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மதுபோதையில் மஞ்சுவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மஞ்சு வீட்டில் இருந்த கயிறை எடுத்து மதன் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் மதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். பின்னர் மதனின் உறவினருக்கு போன்செய்து, அவர் நீண்ட நேரமாக குடித்துவிட்டு எழும்பாமல் தூங்கிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஈரோட்டில் பெயிண்டர் கழுத்தை நெரித்துக் கொலை… மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய கள்ளக்காதலி கைது!

இதனால், மதனின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் அவரை எழுப்பியபோது, மதன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனை அடுத்து, அவர்கள் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதனை பார்த்தனர். அப்போது, அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மஞ்சுவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, மதன் குடித்துவிட்டு அடித்ததால் ஆத்திரத்தில் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து மதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.