அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

 

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு

கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை, விவசாயிகள் விற்பனை செய்வதற்காக, அரசு சார்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்முதல் நிலையங்கள், பெரும்பாலும் திறந்தவெளியில் அமைந்துள்ளதால், இட பற்றாக்குறை காரணமாகவும், விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதில், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகியது. இதன் காரணமாக விற்பனை செய்ய வழியின்றி விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், நனைந்த நெல் மூட்டைகள் உலர்த்துவதற்கான இடம் இல்லாததால், நனைந்த நெல் மூட்டைகள் டிராக்டர் மூலம் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூடுதலாக செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அதிக இடவசதியுடன் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.