“அதிமுகவுக்கு மோடியின் பெயரை கேட்டால் நடுக்கம், அமித்ஷாவின் பெயரை கேட்டால் மயக்கம்”
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மத்திய அரசை எதிர்ப்பது என்பது மாநில கட்சிகளுக்கு எளிதல்ல, மத்திய அரசை மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை தான் இருக்கும், ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை போல் கும்பிட்டு குணிந்து செல்ல வேண்டியதில்லை. மத்திய பாஜக அரசை நேரடியாக எதிர்க்க கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான், அதனால் தான் பாஜக காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்று கூறுகிறது.
மத்திய அரசு சமஸ்கிருதம் மூலமாக இந்தியை திணிக்க நினைக்கிறது, 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே சமஸ்கிருதம் பேசுபவர்கள் இருப்பார்கள் அப்புறம் எதற்கு சமஸ்கிருதத்தில் செய்தி. அஞ்சல்துறை, தபால்துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் எழுத முடியும் என்றால் தமிழகத்தில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? தென்மாநில மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறமுடியாது, இது மத்திய அரசின் ஆணவ போக்கு, இந்தியை திணிக்கும் முயற்சி. இந்தியைவிட பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையானது தமிழ்மொழி. தமிழ் மொழியின் தொன்மை மீது சந்தேகம் உள்ளவர்கள் கீழடி சென்று பாருங்கள், தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பையும் பாதுகாக்க வேண்டும்,
தமிழ் மொழியை பின்னுக்கு தள்ளும் பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் அப்படி தோற்கடிக்கப்பட்டால் தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. சுமார் 13 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்துத்துவா என்ற நச்சு இயக்கம் தென்னாட்டு மண்ணில் முளைக்கவிட ஒருபோதும் விடக்கூடாது, அந்த நச்சுச்செடி பரவி விட்டால் அதை அகற்றுவது எளிதல்ல, வடமாநிலங்களில் பல இடங்களில் இந்த நச்சு செடி பரவிவிட்டது, தென்னாட்டில் உள்ள 5 மாநிலங்களிலும் அந்த நச்சு செடியை முளைக்கவிட கூடாது, அப்போது தான் பிரதமர் மோடியின் ஆணவம் அகந்தை அடங்கும்.
தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு நரேந்திர மோடியின் பெயரை கேட்டால் நடுக்கமடைந்து அமித்ஷாவின் பெயரை கேட்டால் மயக்கம் அடைந்து விடுகிறார்கள், அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு அஞ்சி நடுங்கி அடக்கம் ஒடுக்கமாக உள்ளார்கள், ஏனென்றால் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல துறைகளை கைகளில் வைத்து கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் அரசியல் எதிரிகள், எதிர்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது” எனக் கூறினார்.