இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒசாகாவே ‘அமெரிக்க ஓபன்’ சாம்பியன்
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் ஒசாகா.
இன்று காலை நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பானின் ஒசாகா எதிர்கொண்டது விக்டோரியா அஸரென்கா.
டென்னிஸ் உலகின் முதன்மை வீராங்கனை விக்டோரியா அஸரென்கா. அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழந்தவர். மூன்று முறை அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர்.
இதனால், அஸரென்கா பட்டம் வெல்வதற்கே வாய்ப்பு என்றே பலரும் கணித்தார்கள். அந்தக் கணிப்புக்கு ஏற்றார்போலவே முதல் செட் முடிவு அமைந்தது. ஆமாம், முதல் செட்டில் 6:1 எனும் கணக்கில் அஸரென்கா வென்றார்.
முதல் செட்டில் தவறவிட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க அதிக முனைப்போடு விளையாடினார் ஒசாகா. அதற்கு பலன் கிடைத்தது. இரண்டாம் செட்டில் 6: 3 எனும் கணக்கில் வென்றார் ஒசாகா.
மூன்றாம் செட் பரபரப்பானது. யார் இதில் வெல்கிறாரோ அவரே சாம்பியன். இம்முறையும் ஒசாகாவின் கையே உயர்ந்திருந்தது. முடிவில் 6: 3 எனும் கணக்கில் வென்றார் ஒசாகா.
இதன்மூலம் அமெரிக்க ஓபன் மகளிர் பிரிவின் சாம்பியன் ஆனார் ஒசாகா.
அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸை, அஸரென்கா எப்படித் தோற்கடித்தாரோ அதேபோல இறுதிப்போட்டியில் ஒசாகாவிடம் தோற்றார் அஸரென்கா.
சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை ஒசாகா சமூக அக்கறை மிக்கவர். அமெரிக்காவில் இனவெறியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் உள்ளிட்டோருக்கு நியாயம் கோரி பல போராட்டங்கள் நடந்துவருகின்றன.
கருப்பினத்தவர் மீதான வன்முறையை உலகிற்கே கொண்டு செல்ல, தான் அணிந்திருந்த மாஸ்க்கில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பொறித்திருந்தார் ஒசாகா.
சமூகத்தில் நடக்கும் அநியாங்களைக் கண்டு, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றது ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷமாகி விட்டது.