கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்: சென்னை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

 

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்: சென்னை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தவறுதலாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் சென்னை ஆணையர் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வந்த சூழலில், நடிகர் கமலி ன் எல்டாம்ஸ் சாலை வீட்டில் கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க தனிமைபடுத்தப்பட்டுள்ளோம் என சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போஸ்டர் ஓட்டினர். கமல்ஹாசன் வெளியூர் சென்று வருவதால் நோட்டீஸ் ஓட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தான் எங்கும் செல்லவில்லை என்றும் தனக்கு கொரோனா இல்லை என்றும் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். இந்த செய்தி வெகுவாக பரவியது.

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்: சென்னை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நடிகை கவுதமியின் வீட்டில் நோட்டீஸ் ஓட்டுவதற்கு பதிலாக, அவரது பாஸ்போர்ட்டில் இருக்கும் முகவரியை வைத்து கமல் வீட்டில் ஊழியர்கள் நோட்டீஸை ஒட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த போஸ்டர் கமல் வீட்டில் இருந்து அகற்றப்பட்டது. இந்த விவகாரம் மாநில மனித உரிமை ஆணையம் வரைச் சென்றதால், மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனிடையே நோட்டீஸ் ஒட்டிய ஊழியர் வினோத்குமாரை பணியில் சேர அனுமதி மறுக்கப்பட்டதாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை இன்று விசாரித்த ஆணையம், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செப்.30க்குள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.