‘அதிமுக உடன்பிறப்புகளுக்கு’… ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸின் முக்கிய அறிவிப்பு!

 

‘அதிமுக உடன்பிறப்புகளுக்கு’… ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸின் முக்கிய அறிவிப்பு!

தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் போது அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுங்கள் என அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்தது ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும் கழகத்தின் மீது பேரன்பு கொண்ட நல்லோரும் 2ஆம் தேதியன்று சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்திலும் பேரறிஞர் அண்ணா வழியில் அமைதியுடனும் எம்ஜிஆர் வழியில் விழிப்புடனும் அம்மா வழியில் ஆற்றலுடனும் நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

‘அதிமுக உடன்பிறப்புகளுக்கு’… ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று விரைந்து பரவி வரும் சூழலில் அனைவரும் பத்திரமாகவும் பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாததாகும். அது கழகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை மறவாதீர்கள். வாக்கு எண்ணிக்கையின் போதும் வாக்கு முடிவுகள் வெளியாகும் வேளையிலும் அரசியல் கட்சியினரும் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கழக உடன்பிறப்புகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கண்ணியத்திற்கும் கட்டுப்பாடுகளுக்கும் கடமை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொரு நொடியும் நெறிகளை தவறிவிடக்கூடாது.

வாக்கு எண்ணும் இடங்களுக்கு யார் யார் செல்ல வேண்டும், வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் எத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். நாளைய நாள் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நாள் ஆகையால் அதனை எப்படி முழுமையாக பின்பற்றவேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் அரசுடன் ஒத்துழைத்து அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்று கட்டுப்பாட்டுடனும் வெற்றிக் கொண்டாட்டங்களை மிக மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டு அடக்கத்துடனும் நடத்திட வேண்டும். பட்டாசுகள் வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது. தேர்தல் ஆணையமும் சென்னை உயர்நீதிமன்றமும் நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூறியுள்ள அறிவுரைகள் அனைத்தையும் கழக உடன்பிறப்புகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்; துணிவும் வரவேண்டும் தோழா.. அன்பே நம் அன்னை அறிவே நம் தந்தை என்ற பாடல் வரிகள் நம்மை வழி நடத்தட்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.