பீகாரில் பா.ஜ.க. கூட்டணி 160 இடங்களை கைப்பற்றும்.. மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி… கருத்து கணிப்பில் தகவல்
பீகாரில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் ஆட்சியை தக்கவைத்து கொள்வார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரபலமான நிறுவனம் மக்களிடம் ஒன்று கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பல ருசிகரமான தகவல் கிடைத்துள்ளன. கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 80 தொகுதிகளில் வெற்றி பெறும், ஐக்கிய ஜனதா தளம் 70 தொகுதிகளை கைப்பற்றும். ஆக தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் காங்கிரசுக்கு 15 இடங்களும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 56 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் லோக் ஜன்சக்தி கட்சிக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ளது. மற்ற கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மக்களில் 32 சதவீதம் பேர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக விரும்புகின்றனர். அதேசமயம் துணை முதல்வர் சுஷில் மோடி முதல்வராக 12.5 சதவீதம் ஆதரவு அளித்துள்ளனர். குற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக 8.7 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக உள்ளதாக கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 50.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மோடியின் செயல்பாடு சராசரி என்று 20.9 சதவீதம் பேரும், மோசம் என்று 28.6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும்போது பீகாரில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என எதிர்பார்க்கபடுகிறது.