தடுப்பூசி குறித்து முறையாக அறிவிக்காத அதிகாரிகள்… ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

 

தடுப்பூசி குறித்து முறையாக அறிவிக்காத அதிகாரிகள்… ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் மையத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 10 மையங்களிலும், புறநகர் பகுதியில் 66 மையங்களில் என மொத்தம் 76 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மையங்கள் தோறும் 200, 100 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் நிலையில், மாவட்டத்தில் இதுவரை 3.75 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுழற்சி அடிப்படையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப் பகுதிகளிலும், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது குறித்து அறியாத பொதுமக்கள் வழக்கம்போல் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக இன்று காலை திரண்டனர்.

தடுப்பூசி குறித்து முறையாக அறிவிக்காத அதிகாரிகள்… ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடப்படும் மையத்தில் முன்பு இன்று அதிகாலை முதலே தடுப்பூசி போட மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஆனால், அங்கு இன்று தடுப்பூசி போடப்படவில்லை என போர்டு வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாநகராட்சி பணியாளர்களிடம் கேட்டபோது, இன்று முதல் தடுப்பூசி அவரவர் வார்டு பகுதியிலேயே போடப்படும் என்றும், அதனால் இங்கு போடப்பட மாட்டாது என்று கூறினர்.

இதை முதலிலேயே, தங்களிடம் தெரிவிக்க வேண்டியது தானே என்று கூறி 80-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சத்தி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்த கலைந்து போக செய்தனர். போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.