மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் வழங்க பரிந்துரை!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உயரதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கவும் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நடைபயிற்சி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிக்கவும் டாஸ்மாக் கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்கவும் உயரதிகாரிகள் பரிந்துரைத்ததாக தெரிகிறது.
மேலும், தளர்வு அளிக்கப்படாத 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்படுகிறதா? கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பது குறித்த அறிவிப்பு அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.