பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதுதான் ஓபிசி ஆணையத்தின் பணி என்று உணர்ந்து செயல்பட வேண்டும்! – ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

 

பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதுதான் ஓபிசி ஆணையத்தின் பணி என்று உணர்ந்து செயல்பட வேண்டும்! – ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதுதான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணி என்பதை உணர்ந்து கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் சம்பளத்தை சேர்க்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆணையம் எதிர்க்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு பெறும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கும் நிலையில், அதற்கு துணை போகும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எடுத்துள்ள நிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆணையத்தின் நிர்வாகிகளான தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதிக்கும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதுதான் ஓபிசி ஆணையத்தின் பணி என்று உணர்ந்து செயல்பட வேண்டும்! – ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
தேசிய அளவில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள் ‘கிரீமிலேயர்கள்’ என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் ‘கிரீமிலேயரை’ தீர்மானிக்கக் கணக்கில் கொள்ளப் போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தேன்.

பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதுதான் ஓபிசி ஆணையத்தின் பணி என்று உணர்ந்து செயல்பட வேண்டும்! – ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மார்ச் மாதத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு குறிப்புரை ஒன்றை அனுப்பியது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இந்த நிலைப்பாடும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. அதன்மூலம் மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்படும் என்று ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் நம்பினார்கள். ஆனால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது நிலையிலிருந்து திடீரென பின்வாங்கியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், ‘கிரீமிலேயரைக்’ கணக்கிட சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது.


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் எதிர்ப்பை திரும்பப் பெற்றால், ‘கிரீமிலேயரை’ தீர்மானிக்க, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களுடன், சம்பளமும் கணக்கில் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டுவிடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் ரூ.67 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ள குடும்பங்கள் ‘கிரீமிலேயராக’ கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் கடைநிலை அரசுப் பணியில் இருந்தால் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஒருவேளை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளவாறு ‘கிரீமிலேயர்’ வரம்புக்கான வருமானம் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டால் கூட எந்த பயனும் இருக்காது. இதை விட, ஓபிசி வகுப்பினருக்கு மிக மோசமான சமூக அநீதியை இழைக்க முடியாது. ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வகையில் அது அபத்தமான பரிந்துரையின் அடிப்படையிலானது ஆகும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பது தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.