திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்- ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

 

திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்- ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்- ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூர் வரை, தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய எழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்தத் திட்டம் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது. என்பதன் அடிப்படையிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், ஜெயலலிதா விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிய உத்தரவிட்டார். அதன்படி பொதுக்கருத்துக் கேட்புக் கூட்டங்கள் 6-3-2013, 7-3-2013 மற்றும் 8-3-2013 ஆகிய நாட்களில் தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மேற்குறிப்பிடப்பட்ட எழு மாவட்டங்களின் 134 கிராமங்களைச் சார்ந்த 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும், கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் அமைத்தால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், எரிவாயுக் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், விவசாயப் பணிகளைதொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்தனர்.

கெயில் நிறுவனத்தால் 8-3-2013 தேதியிட்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாகக் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டால் அந்தப்பணிகள் முடியும் வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும், ஒவ்வொரு எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கும் கூடுதல் வால்வு நிலையம் அமைக்க வேண்டி இருப்பதால், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்றும், ஏற்னெவே வாங்கப்பட்ட பொருட்கள், குழாய்கள் மற்றும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்- ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த ஜெயலலிதா அரசு கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைக் பதிக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென்றும் இத்திட்டதிற்கான குழாய்களை தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளைத் தொடரும் வகையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இதற்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் முடிவெடுத்து, அதனை சென்னை உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்தது.

இருப்பினும், சென்னை உயர்நீதிமன்ற ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற ஆணை கெயில் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்ததால்,ஜெயலலிதா இது தொடர்பாக பிரதமருக்கு 8.2.2016 அன்று ஒரு கடிதத்தை எழுதினார். அதில், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக எரிவாயுக் குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

முக ஸ்டாலின்

இந்த சூழ்நிலையில் அண்மையில் ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாயிகள் நிலங்கள் ஊடே எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கி உள்ளதாகவும், கெலமங்கலத்தில் விளை நிலங்களில் குழிகள் தோண்டப்பட்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இதை அறிந்த விவசாயிகள் போராட்டத்தினை அந்தப் பகுதியில் நடத்தியதோடு, இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த திட்டம் புதிதாக அமைக்கப்பட உள்ள தர்மபுரி-ஓசூர் நான்கு வழிச்சாலையில் சாலையோரம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

‘திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்‘ என்பதன் அடிப்படையில் விளை நிலங்களின் ஊடே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.