வைத்திலிங்கம், கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியனுடன் துணை முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் போட்டியிடுவாரா என்பது குறித்து வரும் 7ம் தேதி அவர்களே இணைந்து அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, அக்கூட்டத்தில் ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், இரண்டாவது வாரமாக துணை முதல்வர் ஓபிஎஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை நாளை 7ஆம் தேதி அறிவிக்க இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களும் இன்று இரண்டு கட்டமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் இல்லத்திற்கு வைத்திலிங்கம், கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் வருகை தந்துள்ளனர். அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திவருகின்றனர். இது ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்.