இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், வடமாநில தொழிலாளி பலி!
ஈரோடு
ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மெகபூப்கான். கூலி தொழிலாளியான இவர் சகோதரர் ஆதாப்கான் என்பவருடன் ஈரோட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இருவரும் பெருந்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேப்பம்பாளையம் பரிவு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அங்கு சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மீது, எதிரே திண்டலில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற கார் அதிவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மெகபூப்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆதாப்கான் படுகாயமடைந்தார்.
ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆதாப்கானை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்த நபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.