பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகளுக்கு கட்டுப்பாடு கூடாது: ட்ராய் திட்டவட்டம்!
வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடாது என தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் தெரிவித்துள்ளது.
மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மூலமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ஒருவரின் சோஷியல் மீடியா அக்கவுண்ட் மூலமாக அவரது முழு விவரங்களையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், சோஷியல் மீடியாக்கள் மூலமாக நோட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இவ்வாறு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும் ஒடிடி தளங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய், ஒரு செயலுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் அதனை பரிசோதிக்கலாம், கண்காணிக்கலாம் என்றும் அனுமதி அளித்த பிறகு கட்டுப்பாடுகள் அளிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், செயலிகளுக்கு கண்காணிப்பை கட்டாயமாக்கினால் தகவல் தொடர்பு பாதுகாப்பை அது பலவீனமாக்கும் என்றும் சட்டவிரோதமான பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.