`கைலாசா நாட்டிற்கு தனி வங்கி; தனி கரன்சி!’- நித்யானந்தாவின் கலகல அறிவிப்பு

 

`கைலாசா நாட்டிற்கு தனி வங்கி; தனி கரன்சி!’- நித்யானந்தாவின் கலகல அறிவிப்பு

“வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது” என்று நித்யானந்தா அதிரடியாக அறிவித்துள்ளார்.

சர்ச்சை நாயகன் சாமியார் நித்யானந்தா. இவர் மீது பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் காவல்துறையில் கொடுத்த புகார் பதறவைத்தது. “தனது 2 மகள்களை கடத்தி அகமதாபாத்தில் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருக்கிறார்” என்று கூறியிருந்தார். இதையடுத்து, நித்யானந்தா மீது கடத்தல் வழக்குபதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, நித்யானந்தா மீது கர்நாடகத்தில் பாலியல் வழக்கு உள்ளது. அடுத்தடுத்த வழக்குகள் காரணமாக நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார். அவர் ஈகுவெடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கர்நாடக நீதிமன்றம் ரத்து செய்தது. அவரை உடனடியாக கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டது. ஏற்கெனவே கடத்தல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கைது செய்வதற்காக குஜராத் காவல்துறையினர் இன்டர்போல் மூலம் ‘புளுகார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவரது இருப்பிடத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள நித்யானந்தா அவ்வப்போது சமூக வலை தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்ட புதிய வீடியோவில், “20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை ஒருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை. சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கி விட்டது. என்னுடைய மரணத்துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்து விட்டேன். தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்து விட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில்தான். அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில், சாமியார் நித்தியானந்தா. கைலாசா நாடு அமைக்க போவதாக கூறிக்கொண்டு 2018 ஆம் ஆண்டில் இருந்து தனது சில சீடர்களுடன் தலைமறைவானார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருக்கிறோம். வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.