திருமணமாகி 4 மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை… ஸ்மார்ட் போனால் நேர்ந்த விபரீதம்…

 

திருமணமாகி 4 மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை… ஸ்மார்ட் போனால் நேர்ந்த விபரீதம்…

தர்மபுரி

தர்மபுரி அருகே ஸ்மார்ட் போன் வாங்கி தராததால் திருமணமாகி 4 மாதங்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்த கோடியூர் கிராமத்தை சேர்ந்த மாதையன் மகள் தனலட்சுமி (21). இவருக்கும், அதியமான் கோட்டை அடுத்த தடங்கம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் மாதையன் என்கிற கார்த்திக்கிற்கும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தடங்கம் கிராமத்தில் வசித்து வந்த தனலட்சுமி, கடந்த சில வாரங்களாக தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தருமாறு, கணவரிடம் கேட்டு வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாததால் தற்போது ஸ்மார்ட் போன் வாங்கி தர முடியாது என்று கார்த்திக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருமணமாகி 4 மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை… ஸ்மார்ட் போனால் நேர்ந்த விபரீதம்…

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தனலட்சுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி நேரில் சென்று, தனலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.