அரியலூர் அருகே புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

 

அரியலூர் அருகே புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

அரியலூர்

அரியலூர் திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள கீழ செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மகள் துர்க்காதேவி(25). இவருக்கும், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உட்கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அன்பரசனுக்கும், கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினர் இருவரும், மறுவீடு விருந்துக்காக, துர்க்காதேவியின் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி உள்ளனர்.

அரியலூர் அருகே புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

அப்போது, நள்ளிரவில் துர்க்காதேவி வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண்விழித்த குடும்பத்தினர், துர்க்காதேவியை காணாததால் தேடியபோது, அவர் மரத்தில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். தகவலின் பேரில் மீன்சுருட்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குடும்ப தகராறு காரணமாக துர்க்காதேவி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணாகி 7 நாட்களில் புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.