50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை தளர்த்துங்க.. சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு.. சரத் பவார் வேண்டுகோள்
50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை தளர்த்த வேண்டும், சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசுக்கு சரத் பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு, அரசியலமைப்பு (127வது திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கிறது.ஆனால் இந்த திருத்த மசோதா மூலம் ஓ.பி.சி. பிரிவினரை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மாநிலங்களுக்கு மீண்டும் எஸ்.ஈ.பி.சி.களை (சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள்) பட்டியலிட அதிகாரம் கிடைத்துள்ளது என்ற எண்ணம் இங்கு இருந்தது, ஆனால் 50 சதவீத ஒதுக்கீடு வரம்பு இருப்பதால் அது தவறாக வழிநடத்துகிறது.
90 சதவீத மாநிலங்களில் 50 சதவீதத்தை தாண்டிய இடஒதுக்கீடு உள்ளது. இதனால் ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது. இது அந்த சமூகத்துக்கு அநீதி. இது ஏமாற்றுதல். ஆகையால் 50 சதவீத ஒதுக்கீட்டு வரம்பை மத்திய அரசு தளர்த்த வேண்டும், அதன் பிறகே மாநில அரசுகளால் அவற்றை பட்டியலிட்டு ஒதுக்கீட்டை வழங்க முடியும். மத்திய அரசு அனுபவ தரவுகளை வழங்கினால் மகாராஷ்டிரா அரசால் கணக்கெடுப்பு நடத்த முடியும். மேலும், ஓ.பி.சி. பிரிவினருக்கு நீதி கிடைக்க உதவும். சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பா.ஜ.க. எம்.பி. மவுரியாவும் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.