தலைவலியிலிருந்து விடுபட உதவும் இயற்கை சிகிச்சை!

 

தலைவலியிலிருந்து விடுபட உதவும் இயற்கை சிகிச்சை!

தலைவலி… இன்றைய சூழலில் வயதுவித்தியாசமின்றி பலரும் தலைவலியால் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைப்பளு காரணமாக தலைவலி வரலாம். சிலருக்கு மன அழுத்தத்தால் தலைவலி வரும். நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதால் சிலருக்கு தலைவலி வரலாம். கண்களில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டு பார்வைக் குறைபாடு உண்டானாலும் தலைவலி வரும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் தலைபாரத்துடன் கூடிய தலைவலி வரலாம். தலைவலி வருவதற்கான காரணங்கள் குறித்து இயற்கை மற்றும் யோகா மருத்துவர் அகில் ஷர்மிளாவிடம் கேட்டோம்.

தலைவலியிலிருந்து விடுபட உதவும் இயற்கை சிகிச்சை!
தலைவலி, தலைசுற்றல்:
தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தலைவலி சரியாக தூங்காவிட்டால் வரும். இரவு நேரங்களில் வேலை பார்த்து பகலில் உறங்காவிட்டாலும் தலைவலி வரும். மலச்சிக்கல் காரணமாகவும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பயணங்களால் தலைவலி வரும். உயர்ரத்த அழுத்தம் இருந்தாலும், தலைவலி, தலைசுற்றல் சேர்ந்து காணப்படும். இப்படியாக தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

தலைவலி வந்தால் எதனால் நமக்கு தலைவலி வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் தமது உடலுடன் பேசி ஆலோசனை செய்ய வேண்டும். நீண்ட நாள் தலைவலி இருந்தால், அதற்கான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். வயதுக்கு ஏற்ப வலியின் தீவிரம் மாறுபடும். வலி வந்தால் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்தது சூடாக நீர் அல்லது சூப், பிளாக் டீ அல்லது க்ரீன் டீ போன்றவற்றைக் குடிக்கலாம். மன அழுத்தமாக இருந்தால் சிந்தனைகளை மாற்றி மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். இது நாள்பட்ட தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

தலைவலியிலிருந்து விடுபட உதவும் இயற்கை சிகிச்சை!நீராவி சிகிச்சை:
மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால், நீராவி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான நீரைக் கொதிக்க வைத்து அதில் நொச்சி, வேம்பு போன்ற தழைகளைப் போட்டு உடலை முழுமையாக மூடி முகத்தில் ஆவி படுமாறு செய்ய வேண்டும். இதனால் முகம் மற்றும் தலைப்பகுதியில் தேங்கியிருக்கும் நீரானது வெளியேறி தலைபாரம் குறைவதுடன் மூக்கடைப்பு, சளித் தொந்தரவுகள் குறையும்.

தலைவலியின்போது மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளி, திரிபலா, கடுக்காய் போன்றவற்றை உட்கொண்டால் மலச்சிக்கல் நீங்குவதுடன் தலைவலி வராது. ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர் நீர் அருந்தினால் உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுடன் கழிவுகளை நீக்க உதவும். இதனால் மலச்சிக்கல், தலைவலி, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

`மைக்ரேன்’ தலைவலியாக இருந்தால் அதற்கான மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்வது நல்லது. மனஅழுத்தம், மனச்சோர்வினால் வரும் தலைவலியாக இருந்தால் அதற்கு யோகா சிறந்த பலனளிக்கும். இயற்கை மருத்துவமுறையில் தலைக்கு ஆயில் மசாஜ் செய்வதும் சிறந்த பயனளிக்கும். அக்குபஞ்சர் சிகிச்சையும் தலைவலி தீர உதவும்.