“எடப்பாடியின் அரசியல் அஸ்தமனம் ஆகப்போகிறது” – நாஞ்சில் சம்பத்
சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு நாஞ்சில்சம்பத் அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி -அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்பது அண்டப்புளுகு; ஆகாசப் புளுகு. அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பாஜக நினைக்கிறது. அதனால்தான் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து டெல்லி தலைமை தான் அறிவிக்கும் என பாஜக கூறி வருகிறது. இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி நினைத்து சென்ற டெல்லி பயணம் நிறைவேறவில்லை என்று தோன்றுகிறது . தனது கோரிக்கைகளை வைப்பதற்காகவும், திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், டெல்லி சென்றேன் என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறுவது அவர் தப்பிப்பதற்காக சொல்லக்கூடியதுதான். சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் வரும். முதல்வர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஆபத்து வரப்போகிறது. நன்றி இல்லாதவர்கள் தண்டனையை அனுபவிக்க போகிறார்கள். சசிகலாவை ஏற்க மனமில்லாத அவருடைய நிலையை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறாரே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அந்தக் கட்சியை வழிநடத்த போகிறார். எடப்பாடியின் அரசியல் அஸ்தமனம் ஆகப்போகிறது. தான் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் என்று எடப்பாடி கூறுவது, நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை யோசிக்கும் ஆற்றல் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதை காட்டுகிறது” என்றார்.