நாங்குநேரி இரட்டைக் கொலை; தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!
நாங்குநேரியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த நபர் தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
கடந்த செப்.26ம் தேதி நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சி பகுதியில் வசித்து வந்த சண்முகத்தாய் மற்றும் சாந்தி ஆகிய இரண்டு பெண்கள் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். துண்டிக்கப்பட்ட அந்த பெண்களின் தலைகளை கால்வாயில் கிடந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
மறுகால்குறிச்சியில் ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் நடந்ததாகவும், இதில் ஒரு தரப்பினர் மறு தரப்பினரை பழிவாங்க பாதிக்கப்பட்ட நபர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாட்கள் முன்னர் தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் சிறையில் இருந்து வெளியே வந்தார்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே அந்த பெண்களை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மாடசாமி என்பவர் தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.