இளைஞரை கொன்று, தூக்கில் தொங்கவிட்ட சகோதரிகள்… தகாத உறவால் கொடூரம் …
நாகை
நாகை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை கழுத்தை நெறித்துகொன்று, தூக்கில் தொங்கவிட்ட அக்காள், தங்கையை போலீசார் கைதுசெய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள காக்கழனி கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் அய்யப்பன். கூலி தொழிலாளி. அயப்பனுக்கு, அதே பகுதியை சேர்ந்த திருமணமான சகோதரிகள் கௌதமி(37) மற்றும் ரஜிபாணி (25) ஆகியோருடன் முறையற்ற உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கண்டித்தும், அவர் கைவிட மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஜிபாணி வீட்டின் அருகே உள்ள மரத்தில், அய்யப்பன் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கீழ்வேளூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், தகாத உறவை கைவிட மறுத்ததால் கௌதமி மற்றும் ரஜிபாணி ஆகியோர் அய்யப்பனை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்தது போல நாடகமாடியது அம்பலமானது. இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.