`பிரிந்து வாழ்ந்தார்; கணவனின் வீட்டுக்கு சென்றார்!’- மாமியார் வீட்டில் பெண்ணுக்கு நடந்த சோகம்

 

`பிரிந்து வாழ்ந்தார்; கணவனின் வீட்டுக்கு சென்றார்!’- மாமியார் வீட்டில் பெண்ணுக்கு நடந்த சோகம்

கடந்த 4 மாதங்களா பிரிந்து வாழ்த்து வந்த மனைவி, கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிவி என் சாலையில் வசித்து வரும் முருகன், பூக்கடை நடத்தி வருகிறார். மோகனப் பிரியாவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக முருகனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மோகனப் பிரியாவை கொடுமைபடுத்தி வந்துள்ளனர். இதனிடையே, முருகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கணவனை பிரிந்து கடந்த 4 மாதங்களாக தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டில் இருந்து வந்தார் மோகனப்ப்ரியா. இதனிடையே, அண்மையில் கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார் ப்ரியா.

இந்தநிலையில் நேற்று மாலை மோகனப் பிரியாவின் பெற்றோருக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது, பேசிய முருகன் குடும்பத்தினர், மோகனப் பிரியாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உடனே வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பதறியடித்து வந்துள்ளனர் மோகனப் பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள். அங்கு மோகனப் பிரியா உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதனிடையே, மோகனப் பிரியாவின் உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்துள்ளனர் முருகனின் பெற்றோர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகனப் பிரியாவின் பெற்றோர், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், எங்கள் மகள் மோகனப் பிரியாவின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், கணவர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் அடித்துக் கொலை செய்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் ஆடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோகனப் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, கணவன் முருகன் மற்றும் அவரது பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.