ஈரோட்டில் வேன் ஓட்டுநர் மர்ம மரணம்… மனைவியிடம் தீவிர விசாரணை!

 

ஈரோட்டில் வேன் ஓட்டுநர் மர்ம மரணம்… மனைவியிடம் தீவிர விசாரணை!

ஈரோடு

ஈரோடு சென்னிமலையில் வேன் ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அருகே உள்ள காவிரிபுரம் தெலுங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (35). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். குழந்தைவேல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லமுத்தாம் பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி குழந்தைவேல் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து, அவரது மனைவி உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தெலுங்கனூர் கிராமத்துக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைவேலுவின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த அவரது அண்ணன் மாதேஷ் அதிர்ச்சியடைந்தார்.

ஈரோட்டில் வேன் ஓட்டுநர் மர்ம மரணம்… மனைவியிடம் தீவிர விசாரணை!

இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, சென்னிமலை காவல் நிலையத்தில் மாதேஷ் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, குழந்தைவேல் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைவேலின் மனைவி தனலட்சுமி, அவர்களது உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், குழந்தைவேலு வீட்டிற்கு யார் எல்லாம் வந்து சென்றார்கள்? என்ற விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை முடிவுகள் வந்ததும், அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.