சேலம் அருகே இலை வியாபாரி மர்ம மரணம்… மனைவியிடம் தீவிர விசாரணை!

 

சேலம் அருகே இலை வியாபாரி மர்ம மரணம்… மனைவியிடம் தீவிர விசாரணை!

சேலம்

சேலம் அம்மாபேட்டையில் வாழை இலை வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷாலினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஷாலினி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று விட்டு வந்துள்ளார். அப்போது, பிரபு காதில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சேலம் அருகே இலை வியாபாரி மர்ம மரணம்… மனைவியிடம் தீவிர விசாரணை!

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி ஷாலினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரபுவை அடையாளம் தெரியாத 2 நபர்கள், கழுத்தை நெரித்துகொன்று விட்டு, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறி உள்ளார்.

முதலில் மர்மமாக இறந்ததாக கூறிய அவர், பின்னர் நகைக்காக கொல்லப்பட்டதாக கூறியது, போலீசார் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், போலீசார் ஷாலினியை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பிரபு கொலை செய்யப்பட்டாரா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலை வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அம்மாபேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.