ஈரோட்டில் கறிக்கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு- போலீசார் விசாரணை!

 

ஈரோட்டில் கறிக்கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு- போலீசார் விசாரணை!

ஈரோடு

ஈரோட்டில் கறிக்கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், ஓங்காளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ரபீக். இவரது மகன் பர்மானுல்லா (27). இவர் அங்குள்ள கறிக்கடை ஒன்றில் கறி வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், மனைவி பர்வீன் பானு தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி மதியம் கறிக் கடையில் வேலை செய்து கொண்டிருந்த பர்மானுல்லாவிடம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 3 பேர், பெட்ரோல் வாங்க காலி கேன் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து பர்மானுல்லாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பர்மானுல்லா தலையின் பின்புறம் வலிப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு, திடீரென மயங்கி விழுந்தார்.

ஈரோட்டில் கறிக்கடை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழப்பு- போலீசார் விசாரணை!

இதனால் அதிர்ச்சியடைந்த பர்வீன் பானு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை பர்மானுல்லா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அந்த 3 பேர் கும்பல் தாக்கியதால் தான் இறந்தாரா? அல்லது உடல் நிலை சரியில்லாமல் இறந்தாரா? என தெரியவில்லை.

இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்மானுல்லாவின் உடல் பிரேத பரிசோதனை முடிவு வெளியான பிறகே அவர் எவ்வாறு இறந்தார் என தெரிய வரும். அதன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.