ஏலகிரியில் காவலர் மர்ம மரணம்… காதலியை கரம் பிடிக்க காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்…

 

ஏலகிரியில் காவலர் மர்ம மரணம்… காதலியை கரம் பிடிக்க காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்…

திருப்பத்தூர்

ஏலகிரி மலைப்பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த காவலர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரது மகன் பூவரசன் (24). இவர் கடந்தாண்டு காவலர் தேர்வில் வெற்றிபெற்று, கோவையில் சில மாதங்களுக்கு முன்பு காவலராக பணியில் சேர்ந்தார். இதனிடையே, பூவரசன், ஜோலார்பேட்டை குடியானகுப்பத்தை சேர்ந்த பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் பூவரசனின் பெற்றோர் பெண் வீட்டிற்கு சென்று பூ மாற்றியுள்ளனர். தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை அன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பூவரசன் இரவாகியும் வீட்டிற்கு திரும்பாததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை அடுத்து, பூவரசனின் செல்போன் டவர் லொகேஷனை ஆய்வுசெய்தபோது, அது ஏலகிரி மலையில் இருப்பதாக காட்டியது.

ஏலகிரியில் காவலர் மர்ம மரணம்… காதலியை கரம் பிடிக்க காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்…

இதனை அடுத்து, செல்போன் டவர் காட்டிய ஏலகிரி அடுத்த அத்தனாவூர் அடுத்த வாரக்கொட்டை காட்டுப் பகுதிக்கு குடும்பத்தினர் சென்றபோது, பூவரசன் மதுவில் விஷம் கலந்துகுடித்து, சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். திங்கட்கிழமை நிச்சயதார்த்தம் நடக்கும் நிலையில் பூவரசன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளாதால், பெண் வீட்டார் எதிர்ப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.