ஓகேனக்கல் வனப் பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற தொழிலாளி மர்ம மரணம்

 

ஓகேனக்கல் வனப் பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற தொழிலாளி மர்ம மரணம்

தர்மபுரி

ஓகேனக்கல் வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமஞ்சி அருகேயுள்ள கொடகரை கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா(55). இவர் நாட்டு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில், ருத்ரப்பா அதேபகுதியை சேர்ந்த கால்நடை வளர்க்கும் இருவருடன் சேர்ந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஒட்டப்பட்டி பீட் வனப்பகுதியை ஒட்டிய குத்தராயன் மலை அடிவாரத்தில் பட்டி அமைத்து, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச சென்றுள்ளார். பட்டி அமைந்துள்ள பகுதியிலேயே தங்கியிருந்த அவர், 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு சென்று திரும்புவது வழக்கம்.

ஓகேனக்கல் வனப் பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற தொழிலாளி மர்ம மரணம்

சமீபத்தில் வீட்டுக்கு சென்று திரும்பிய ருத்ரப்பா, மறுநாள் வனத்திற்குள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற நிலையில் மீண்டும் பட்டிக்கு திரும்ப வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் தங்கி இருந்தவர்கள், ருத்ரப்பாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், உறவினர்கள் வனப்பகுதியில் தேடியபோது கோனயன்தோப்பு என்ற இடத்தில் உடல் அழுகிய நிலையில் ருத்ரப்பா சடலமாக கிடந்தார்.

மேலும், அவரது கழுத்து மற்றும் கை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட அடையாளமும் காணப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் பென்னாகரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ருத்ரப்பா மகன் சங்கர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்