இருசக்கர வாகன விபத்தில் நகராட்சி பெண் ஊழியர் பலி!

 

இருசக்கர வாகன விபத்தில் நகராட்சி பெண் ஊழியர் பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கும்பகோணம் நகராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த திட்டுவிளையை சேர்ந்தவர் ஷெல்டன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிநயா (28). பொறியியல் பட்டதாரியான இவர் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில், தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, குமரி மாவட்டம் பரப்புவிளையில் உள்ள அபிநயாவின் தாயார் மற்றும் சகோதரி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இருசக்கர வாகன விபத்தில் நகராட்சி பெண் ஊழியர் பலி!

இதனால், அவர்களை கவனித்து கொள்வதற்காக அபிநயா, பரப்புவிளையில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது சகோதரியை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பாம்பன்விளை பகுதியில் சென்றபோது, அபிநயாவின் வாகனம் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில், படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அபிநயாவின் சகோதரர் சபரீஷ் புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.