‘ஹெலிகாப்டர் வாங்கி குடுங்க’ – குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய பெண்… காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
கடிதம் எழுதிய பெண் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அகர் கிராமத்தைச் சேர்ந்த பாசந்தி பாய் லோகர். தன்னுடைய பண்ணை நிலத்திற்குச் செல்வதற்கு ஹெலிகாப்டர் வேண்டும் என்றும், அதை வாங்க கடன் வழங்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியுள்ள கடித்ததில், “எனக்குச் சொந்தமாக சிறிது பண்ணை நிலம் இருக்கிறது. அதில் விவசாயம் செய்து தான் பொழப்பு நடத்திவருகிறேன். ஆனால் தற்போது அந்த நிலத்துக்குச் செல்லும் இரு சாலை வழிகளை பர்மானந்த் பதிதார் என்ற நபரும் அவரின் இரு மகன்களும் மறித்து அடாவடி செய்கிறார்கள். இதனால் என்னால் என்னுடைய நிலத்துக்குச் செல்ல முடியவில்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. ஆகவே நீங்கள் எனக்கு உதவுங்கள். சாலை வழியாகச் செல்ல முடியாததால் ஹெலிஹாப்டர் இருந்தால் என் நிலத்துக்குச் சென்றுவிடுவேன். அது வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு வங்கியில் கடன் வழங்க உத்தரவிடுங்கள். பறப்பதற்கான உரிமத்தையும் வாங்கி கொடுங்கள். விவசாயம் மேற்கொள்ள விவசாயக் கருவிகளையும் எனக்கு கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உள்ளூர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் தான் அவர் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார். அவரின் இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் வசிக்கும் மாண்ட்சர் மாவட்ட எம்எல்ஏவின் காதுக்கும் தகவல் எட்டியுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், பாசந்திக்கு உதவ முன்வருவதாக உறுதியளித்துள்ளார். அவருக்குக் கட்டாயம் உதவுவேன். ஆனால் என்னால் ஹெலிகாப்டர் வாங்கி கொடுக்க முடியாது என கிண்டலாகக் கூறியிருக்கிறார்.