காட்டு யானைகளின் அருகே சென்று செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்… எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்!

 

காட்டு யானைகளின் அருகே சென்று செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்… எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ளது. காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி திரிவதோடு, சாலையோர வனப் பகுதியில் முகாமிட்டபடி தீவனம் உட்கொள்கின்றன.

இந்த நிலையில், நேற்று ஆசனூர் அருகே காட்டுயானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உட்கொண்டிருந்தன. அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், யானைகளை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி காட்டு யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர்.

காட்டு யானைகளின் அருகே சென்று செல்பி எடுத்த வாகன ஓட்டிகள்… எச்சரித்து அனுப்பிய வனத்துறையினர்!

காட்டு யானைகள் திடீரென மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளதை அறிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் வாகன ஓட்டிகள் கூட்டமாக யானைகளின் அருகே சென்று செல்பி மற்றும் வீடியோ எடுத்தனர். இதனை அந்த வழியாக சென்ற, மற்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தும், வாகன ஓட்டிகள் வன விலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.