சென்னையில் பூட்டிய வீட்டில் தாய், மகள் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
சென்னை
சென்னையில் பூட்டிய வீட்டினுள் தாய் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோட்டூர்புரம் பள்ளிப்பட்டு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கல்பனா(36). இவருக்கு திருமணமாகி குணாலி(13) உள்பட 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 நாட்களாக கல்பனாவின் வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் உள்ளேயிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, கல்பனா தூக்கில் தொங்கிய நிலையிலும், குணாலி கட்டிலில் உயிரிழந்த நிலையிலும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கல்பனாவின் கணவர் 4 நாட்களுக்கு முன்பு மற்றொரு குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. கணவர் பிரிந்துசென்றதால் அவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.