கோவாக்ஸின் திட்டத்தில் அதிக நாடுகள் கைகோர்த்துள்ளன – WHO தகவல்
நூற்றாண்டு காணாத பேரிடராக கொரோனா மாறிவிட்டது. எந்த நாடும் இதன் தாக்குதலுக்குத் தப்ப வில்லை. சில நாடுகள் இதன் தொற்று தொடங்கியதுமே சுதாரித்து மக்களைக் காத்துக்கொண்டன. பெரும்பாலான நாடுகளில் நன்கு பரவியப் பிறகே இச்சிக்கலின் தீவிரம் உணரப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 777 பேர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 726 நபர்கள்.
கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 69 ஆயிரத்து 301 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.
தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 74,02,750 பேர். இவர்களில் 1 சதவிகிதத்தினரே தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். உலக சுகாதார மையம் கோவாக்ஸ் எனும் திட்டத்தில் கொரோனா தடுப்பூசியை உலகநாடுகள் அனைத்திலும் கொண்டுச் சேர்க்க முடிவெடுத்துள்ளது.
அமெரிக்க உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயலாற்ற தொடக்கம் முதலே மறுப்புத் தெரிவித்து வருகிறது. செப்டம்பர் 13-ம் தேதி உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் , “பணக்கார நாடுகளும் கோவாக்ஸ் திட்டத்தில் சேர்வது அவசியம்” என்று அழைப்பு விடுத்திருந்தார். ‘பணம் இல்லாத ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி செல்லா விட்டால், அது மீண்டும் உலகையே சுற்றிசுற்றிக்கொண்டே இருக்கும். அந்தச் சூழல் எந்த நாட்டுக்கும் நல்லதல்ல’ என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது உலகசுகாதார மையம் அறிவித்துள்ள தகவலில், உலகில் உள்ள 156 நாடுகள் கோவாக்ஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளது. மேலும், 64 பொருளாதாரத்தில் உயர்ந்த வசதிமிக்க நாடுகளும் இத்திட்டத்தில் இணைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
படங்கள்: World Health Organization twitter pages