தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக களமிறங்கிஉள்ளன. இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கிவிட்டது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் மீண்டும் லாக் டவுன் போட வேண்டிய சூழல் ஏற்படும் என மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.