முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் மோடி திடீர் ஆலோசனை
வங்க கடலில் உருவான புயல் பாம்பனுக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருக்கோணமலைக்கு 200 கிமீ, கன்னியாகுமரிக்கு 600 கிலோ மீட்டர் தொலைவிலும் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல், கரையை கடக்கும்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், வங்கக்கடலில் உருவான புரெவி புயலின் நகரும் வேகம் 15 கி.மீட்டராக குறைந்து உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “புரெவி சூறாவளி காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் நிலைமைகள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விவாதித்தேன். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.