‘நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ – மு.க ஸ்டாலின் அறிக்கை!

 

‘நீட் தேர்வுக்கு  வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ – மு.க ஸ்டாலின் அறிக்கை!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு சிபிஎஸ்இ வழி முறையை பின்பற்றுவதால், தமிழகத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களால் தேர்வுகளை எதிர்கொள்ள முடியவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த தேர்வை எதிர்கொள்வதற்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது.

‘நீட் தேர்வுக்கு  வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ – மு.க ஸ்டாலின் அறிக்கை!

அதனால் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நடப்பாண்டு நீட் தேர்வில் 1000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், அது பொய்யான விவரம் என்றும் நீட் தேர்ச்சி அதிகமாகிறது என அரசு பொய்யான பிம்பத்தை பிரதிபலிப்பதாக திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் “நீட்” தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயற்சி செய்தவர்களின் கபட எண்ணத்தைத் தகர்த்துள்ளது இன்றைய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு.

‘நீட் தேர்வுக்கு  வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ – மு.க ஸ்டாலின் அறிக்கை!

மொத்தம் 720-க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி (cleared) என நிர்ணயித்துள்ளது என்.டி.ஏ. எனும் தேசியத் தேர்வு முகமை. ஒருவர் “நீட்”டில் தேர்ச்சி பெற்றாலே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற கருத்து மாணவ – மாணவியரிடையேயும், பெற்றோரிடையேயும் பரப்பப்பட்டிருக்கிறது; ஆனால் அது உண்மையல்ல; அதன் மூலம் எம்.பி.பி.எஸ். சேர விண்ணப்பம் போட மட்டுமே அந்த மாணவர் தகுதி பெற்றவர் ஆகிறார். அவ்வளவுதான்! அதாவது, நீட் தேர்ச்சி என்பது கணிதத்தில் 100-க்கு 35 எடுத்து, “ஜஸ்ட் பாஸ்” ஆவதைப் போல.

இந்த ஆண்டு நீட் “கட்-ஆப்” மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் அனுமதி கிடைக்கலாம் என்கிறது “டைம்ஸ் ஆப் இந்தியா”.

அரசுப் பள்ளி மாணவர்களில் “நீட்” தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். அரசின் பயிற்சி மையங்களில் படித்து, 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நால்வர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணாக்கர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.

அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 89 பேரில், 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு – குறிப்பாக, அவர்களில் 423 மதிப்பெண் பெற்றவருக்குக் கூட எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்கிறது அந்தக் கட்டுரை.

“நீட்” தேர்வு முறையை நியாயப் படுத்தும் போலியான நோக்கில்; ‘தமிழகம் சாதிக்கிறது’ எனப் பூரிப்படைந்தோர், புளகாங்கிதம் கொண்டோர், பரப்புரை செய்யலாம் என்ற கற்பனையில் மிதந்தோர், இந்தக் கசப்பான உண்மையை அறிந்து தெளிவார்களாக!

இனியேனும் “நீட்” தேர்வு முறைக்கு வக்காலத்து வாங்குவதை சப்தமில்லாமல் நிறுத்திக் கொள்வார்களாக! தமிழக மாணவர்களின் – குறிப்பாக நகர்ப்புற, கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தரப்பிரிவு மாணவ – மாணவியரின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டுமானால், மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திவரும் “நீட்”, ரத்து செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வார்களாக!” என குறிப்பிட்டுள்ளார்.