“எழுவர் விடுதலையே முதல்வர் ஸ்டாலினின் குறிக்கோள்… விரைவில் நடவடிக்கை”
நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் எழுவர் விடுதலை குறித்து புதிதாக அமைந்துள்ள திமுக அரசு கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனையில் 69 சதவீத இடஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையே எங்கள் குறிக்கோள். கட்டாயம் எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானமாக உள்ளார். என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கலந்தாலோசிப்போம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். இந்திரா சஹானி வழக்கு தீர்ப்பு அடிப்படையில்தான் மராத்திய இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திரா சஹானி வழக்குக்குப் பிறகுதான், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
இந்த இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு, அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தற்போது மராத்திய இடஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்ட 500 பக்க தீர்ப்பை படித்து அரசு தலைமை வழக்கறிஞர் முதல்வரிடம் உரிய முடிவை தெரிவிப்பார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதுதான் முதல்வரின் நோக்கம். இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டு, அது நிலைநிறுத்தப்படும்” என்றார்.