மாணவி சுபஸ்ரீயின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்: ஸ்டாலின்

 

மாணவி சுபஸ்ரீயின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்: ஸ்டாலின்

தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பு கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், தனியாக கோச்சிங் வகுப்பு சென்று படிக்க முடியாத காரணத்தால் பல மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவு காணாமல் போகிறது. இதனால், உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும், இந்த ஆண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடந்தே தீரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த கோவையைச் சேர்ந்த சுபஶ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள, திமுக தலைவர் ஸ்டாலின் “NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை! சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்!. கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு!” என தெரிவித்துள்ளார்.