“கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது” மு.க ஸ்டாலின் ட்வீட்!
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, கோவையில் நேற்று அடுத்தடுத்து 4 கோவில்களில் தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கோவில்கள் சேதம் அடைந்த நிலையில், அங்கு மிகவும் பரபரப்பு நிலவியது. இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு கோவையில் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோயில்களை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் நேற்று மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
பேரிடர் காலத்தில் அதிமுக்கியப் பிரச்சினைகளிலிருந்து, பொது கவனத்தை திசை திருப்பாதவண்ணம், குற்றம் புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவதை @CMOTamilNadu உறுதி செய்ய வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) July 19, 2020