‘பேச மறுக்கும் பழனிசாமி’ : மு.க ஸ்டாலின் கண்டனம்!
போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச, ஆணவத்துடன் மறுத்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 3-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கைகளுடன் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் துணை ஆணையர் லட்சுமிகாந்தன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதியதாரர்களுக்குப் பணப்பலன், 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முதலமைச்சர் திரு. பழனிசாமியோ அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சரோ போராடும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச அடாவடியாக ஆணவத்துடன் மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கோரிக்கை விடுத்தும் கூட, முதலமைச்சர் பழனிசாமிக்குப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு நேரும் இன்னல்களை அ.தி.மு.க. அரசு கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு – பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன் ” என்று வலியுறுத்தியுள்ளார்.