உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்து, அதிமுக அரசு இரட்டை வேடமிடுகிறது – ஸ்டாலின்

 

உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்து, அதிமுக அரசு இரட்டை வேடமிடுகிறது – ஸ்டாலின்

அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது என திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை, நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கவேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர், தேனி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுவருகிறது.

உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்து, அதிமுக அரசு இரட்டை வேடமிடுகிறது – ஸ்டாலின்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், “இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளைப் வாபஸ் பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறம் என்றால், உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.

உரிமைப்போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமடுக்காத அதிமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்திவையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.