கொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசு அதிமுக ஆட்சி- ஸ்டாலின்
கரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழா காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கரூர் நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், திமுகவின் 100 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. சென்னை அறிவாலயத்திலிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி வழியாக திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்டத்தில் 500 இடங்களில் சுமார் 100 பேர் வீதம் ஜூம் ஆப் மூலம் இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட திமுக முப்பெரும் விழாவில் காணொலி மூலம் பேசிய ஸ்டாலின், “கொரோனா காலத்திலும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் கொள்கைகளை பரப்பி வருகிறோம். பொதுக்குழுக் கூட்டத்தை காணொலி வாயிலாக பிரம்மாண்டமாக நடத்தினோம். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கும் வகையில் நடத்தியதற்கு எனது வாழ்த்துகள். கொரோனா காலத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கி மக்களுக்கு உதவி செய்ய கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசாக அதிமுக ஆட்சி இருக்கிறது. எமெர்ஜென்சி காலமாக இருந்தாலும், கொரோனா காலமாக இருந்தாலும் திமுகவின் போராட்டம் தொடரும்” எனக் கூறினார்.